-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 5 பெப் 2010 -
ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். யாழ்ப்பாண மக்கள் தங்களின் சொந்த இடங்களைப் பார்ப்பதற்குக் கூட உரிமையின்றி அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் காலம் கழிக்கும் போது சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையயடுப்பது எதற்கான தென்ற கேள்வி எழுவே செய்கின்றது.
ஏதோ! நாங்கள் காட்சிப் பொருட்கள். அவர்கள் ரசிகர்கள் எங்களையும் எங்கள் வாழ்விடங்களையும் வந்து பார்த்து விட்டுச் செல்லட்டும் எல்லாம் முடிந்த பின்னர் – எங்கள் இருப்பு-வாழ்வு – உரிமை அத்தனையும் உறங்கிப் போன பின்பு வந்தால் என்ன? போனால் என்ன? என்ற மனநிலையே யாழ்ப்பாண மக்களிடம் உள்ளது.இருந்தும் சிலவற்றை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அதாவது இலங்கையில் யுத்தம் முடிபுற்றது உண்மையாயினும், சட்டங்கள், தேச வழமைகள் அழிந்து போகவில்லை.
எனினும் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய உள்ளூராட்சி சபைகள், சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாம் வழக்கொழிந்து போனது போல நடந்து கொள்கின்றன.குறிப்பாக நல்லூர்க் கந்தனின் ஆலயச் சூழலைப் பார்க்கும் போது அங்கு தெருவோர வியாபாரம் களைகட்டியுள்ளது.நீண்டகாலம் இந்நிலை தொடருமாயின் அங்கு ஆட்சி உரிமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும்.அதே நேரம் நல்லூர் முருகனின் மகோற்சவ காலத்தில் நல்லூர் சுற்றுவட்டத்தில் வியாபாரம் செய்த தமிழ் மக்கள் அந்த இடங்களை மீளப் பெறமுடியாத நிலை உருவாகும்.
எனவே நல்லூர் மகோற்சவ காலத்தில் மகோற்சவ கால கடைகளை அமைப்பதில் பிரச் சினை உருவாகும் என்ற உண்மையை முன் கூட்டியே உணர வேண்டும்.இதேபோல் மரக்கறி விற்பனைகளும் அங்கீகரிக்கப்பட்ட சந்தைகளில் இருந்து விலகி நினைத்த இடங்களில் நடைபெறுகின்றன.இந்நிலைமை தொடருமாயின் யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி மரக்கறிச் சந்தைகள் செயலிழக்கவும் அவற்றை குத்தகைக்கு எடுத்த வர்கள் நட்டமடையவும் வாய்ப்பு உண்டு.
இந்நிலை யாழ்ப்பாண உள்ளூராட்சி சபைக ளின் வருமான மூலங்களை இல்லா தொழித்து விடும்.எனவே இந்த உண்மைகளை உணர்ந்து உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

Posted in 





