பூனை கறுப்பா, வெள்ளையா என்பதல்ல இப்போது பிரச்சனை; எலியைப் பிடிக்குமா, இல்லையா என்பதே!

(நன்றி- புதினப்பலகை-நந்தன் அரியரத்தினம் )

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், குறிப்பாக சிறிலங்காவினாலும் அதன் நேச நாடுகளினாலும் புலிகளின் தலைமை வீழ்த்தப்பட்ட பின்புலத்தில், நமது அரசியல் அரங்கில் தோன்றியிருக்கும் முதன்மையான கேள்வி தமிழ் மக்களுக்கான அடுத்த தலைமை எது என்பதுதான்.

இந்த கேள்வி மிகவும் சிக்கலானதும் உணர்ச்சிவயமானதும் கூட.

ஏன் இது உணர்ச்சிவயமாக இருக்கிறதென்றால் கடந்த 30 வருடங்களாக இதுதான் நமது தலைமை என்று குறிப்பிடப்பட்ட ஒன்றிலிருந்து சடுதியாக எவ்வாறு விலகுவது என்ற கேள்வியில்தான் அதன் உணர்ச்சிமயமான தன்மை தங்கியிருக்கிறது.

இது மிகவும் சிக்கலானதுதான்; ஆனாலும் சூழலைக் கருத்தில் கொண்டு நமது உணர்ச்சிவயமான எண்ணங்களிலிருந்து விடுபட்டு சிந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அவ்வாறு சிந்திக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் மேலும் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம்.

விடுதலைப் புலிகளின் தோல்வி, நமது அகநிலை அரசியலைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களை அரங்கிற்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஒன்று, தமிழர் அரசியல் அதன் பேரம் பேசும் ஆற்றலை [Demanding Power] இழந்திருக்கிறது.

இரண்டு, சிங்களம் அதன் நிகழ்சி நிரலைத் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் திணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது.

இதனை இன்னும் சற்று ஆழமாக நோக்குவதானால் மிதவாத அரசியலின் தோல்விக்குப் பின்னர் வளர்ச்சியடைந்த ஆயுத ரீதியான போராட்ட அரசியல் மீண்டும் மிதவாத அரசிலுக்கே திரும்பியிருக்கிறது.

இங்குள்ள சிக்கலான கூறு என்னவென்றால், ஆரம்பத்தில் மிதவாத அரசியலுக்கு இருந்த பேரம் பேசும் ஆற்றலைக் கூட இழந்த நிலையில்தான் நமது அரசியல் இயக்கம் மீண்டும் மிதவாத அரசியலை நோக்கி திரும்பியிருக்கிறது.

இது மிகவும் துரதிஸ்டவசமானதுதான்; ஆனால், இது தான் இன்றைய நிலைமை.

நமது அரசியல் தலைமைத்துவம் குறித்த சிக்கல்களை மேலும் விளங்கிக் கொள்வதாயின், இன்று புலம்பெயர் சூழலில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை நோக்கலாம்.

“வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான மீள் வாக்கெடுப்பு”, “சுதந்திர தமிழ் ஈழத்திற்கான மக்கள் வாக்கெடுப்பு” என்றவாறான சொல்லாடல்களில் நிகழ்வுகள் அங்கு நடபெற, ஈழத்தில் அது குறித்து கருத்தில் எடுப்பதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை தோன்றியிருக்கிறது.

இது எதனை நிரூபிக்கிறது என்றால் – முன்னர் புலம்பெயர் சூழலும் ஈழமும் ஒரே நேர் கோட்டில் பயணித்த நிலைமை மாறி தற்போது இரண்டும் இரு வேறு திசையில் பயணிக்கிறது என்பதையே.

தமிழ் மக்கள் தம்மை ஒருங்கிணைப்பதற்கான தலைமையற்று கையறு நிலையில் இருக்கின்றனர் என்பதையே இது மேலும் வெளிப்படையாக்குகிறது.

இந்த இடத்தில்தான் தற்போது ஈழத்தில் தமிழர்களின் தலைமையாகக் கொள்ளக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனம் பெறுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமை குறித்தும் இங்கு அவதானிப்பது அவசியம். அது இதுவரைகாலமும் தனித்துவமான ஒரு அமைப்பாக இயங்கியிருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் தமது எண்ணங்களை சனநாயகத் தளத்தில் பிரதிபலிப்பதற்கான ஒரு உப அமைப்பாகவே அதனை பயன்படுத்தி வந்தனர்.

கூட்டமைப்பைப் பொருத்தமட்டில் இரு வகையான அங்கத்தவர்களை அது கொண்டிருக்கிறது.

ஒரு வகையினர் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் வேறு வழியில்லாமல் விடுதலைப் புலிகளின் பலம் என்னும் நிழலில் ஒதுங்கிக் கொள்ள முயன்றோர். அதாவது விடுதலைப் புலிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த மக்களின் எண்ணப் போக்கிற்கு ஏற்றவாறான ஒரு சிறந்த மார்க்கமாக இதனை அவர்கள் கருதியிருக்கலாம்.

இரண்டாவது வகையினர், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்ற வகையில் சனநாயக அரசியல் தலைவர்களாக அறிமுகமானவர்கள். விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்திய வரைக்கும் இவ்வாறானவர்களே கூட்டமைப்பில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். விடுதலைப் புலிகளின் பலத்தைக் கொண்டு தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டவர்களும் இவர்களே.

ஆனால் விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து மீண்டும் முன்னைய தமிழரசுக்கட்சி வகை செல்வாக்கிற்குள் தமிழர்களின் அரசியல் வந்திருக்கிறது.

கடந்த குடியரசு அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களை ஆதரிப்பதில் கூட்டமைப்பில் இடம்பெற்ற முரண்பாடுகளே இதற்குச் சான்று.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டால் – தற்போதைய சூழலில் தமிழர் கூட்டமைப்பை ஒரு கொள்கை நிலைப்பட்ட ஒரு அமைப்பாக உருமாற்ற வேண்டிய தேவையிருக்கிறது.

கொள்கை நிலைப்பட்ட அமைப்பு என்பதன் அர்த்தம், களநிலை அரசியல் யதார்த்தம் மற்றும் பிராந்திய, சர்வதேச அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதாகும்.

இனி வரப் போகும் காலத்தில் இலங்கைக்குள்ளான ஓர் அரசியல் தீர்வையே, இலங்கையில் இருந்து இயங்கும் எந்தவொரு தமிழ்த் தலைமையாலும் முன்வைக்க முடியும்.

நிச்சயமாக அது சுயாட்சி அல்லது Federal என்ற சொல்லைத் தாண்டிப் பயணிக்க முடியாது.

கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு பிறிதொரு வகையிலும் முக்கியத்துவம் உடையது.

கடந்த குடியரசு அதிபர் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பை பலவீனப்படுத்ததுவதற்காகன முயற்சிகளும் திரைமறைவில் நடைபெறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தலைமையுடன் தாம் பேசுவோம் என சமீபத்தில் மகிந்த தெரிவித்த கருத்தின் பின்புலத்தில் வேறு ஒரு நிகழ்ச்சிநிரல் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தற்போது தம்முடன் இருக்கும் தமிழ் அணியினருடன் [டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்தன், இன்னும் வேறு ஆட்கள்] மற்றும் கூட்டமைப்பிலிருக்கும் சிலரையும் இணைத்து [...?] புதியதொரு அணியை தேர்தலில் இறக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றலை சிதைப்பதற்கான முயற்சிகளும் பிறிதொரு பக்கத்தில் நடைபெறுகின்றன என்பதையே அந்த கருத்து சுட்டிக் காட்டுகிறது.

இந்த நிகழ்ச்சி நிரலை முறியடிக்க வேண்டுமாயின் கூட்டமைப்பை கொள்கை நிலைப்பட்ட அமைப்பாக வலுப்படுத்துவதே நம் முன்னுள்ள ஒரேயொரு தெரிவு.

இன்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பலரிடம் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தவொரு தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களி்ல் பலர் – பிராந்திய பூகோள அரசியல் நகர்வுகள் குறித்துப் படித்தறிய, அதற்கு ஏற்ப தந்திரோபாய அரசியல் நகர்வுகளில் ஈடுபட ஆற்றல் அற்றவர்களாகவே தென்படுகின்றனர்.

இதற்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம். அவர்கள் எப்போதுமே திறமைசாலிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் பார்க்க தங்களால் இலகுவில் பயன்படுத்தக் கூடியவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே பல தகுதியற்ற நபர்கள் நமது அரசியல் அரங்கிற்கு வர நேர்ந்தது.

அரசியலுக்கான தகுதி என்பது பிறப்பாலோ, குடும்பப் பின்னணியாலோ, உணர்ச்சியூட்டும் பேச்சு வல்லமையாலோ அல்லது தலைமை மீதான பற்றாலோ தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல.

அறிவதற்கான பரந்த தேடலில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆராயும் ஆற்றலில், அறிவையும் ஆராய்ச்சியையும் வைத்து சிறந்த முடிவை எடுக்கும் திறனில், அந்த முடிவின் வழி செயற்படும் துணிவில் அது தங்கியிருக்கிறது.

தமிழர் கூட்டமைப்பை ஒரு கொள்கை நிலைப்பட்ட அமைப்பாக உருமாற்றும் போது இது குறித்துச் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பின் தலைமைப் பிரிவினருக்கு உண்டு.

எனவே தமிழர்களுக்கான அரசியல் தலைமை குறித்து சிந்திக்கும் போது முன்னைய தவறுகளை மீளவும் செய்வதாக அது அமைந்துவிடக் கூடாது.

இப்போது கட்சி பேதங்கள் முக்கியமல்ல; கொள்கையை ஏற்றுக் கொண்டு செயலாற்றும் ஆர்வம் எந்த அமைப்பைச் சேர்ந்தவரிடம் இருந்தாலும் அவர் ஆற்றல் வாய்ந்தவராயின் இணைத்துக் கொள்வது அவசியமாகும்.

இப்போது பிரச்சனை பூனை கறுப்பா, வெள்ளையா என்பதல்ல; அது எலியைப் பிடிக்குமா, இல்லையா என்பதே!

Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing