யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் கட்டிடத்தொழில் உட்பட்ட, தேர்ச்சி பெற்ற தொழில்சார் பணியாளர்கள் இருக்கின்ற போதும், தென்னிலங்கை சிங்களவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளமை, யாழ்ப்பாண மக்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்மேளத்தின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப்பு செயலாளருமான சீ வீ கே சிவஞானம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உள்நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், தமது சொந்த முகவர்களையே பிரதிநிதிகளாக நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அவ்வாறு நிறுத்தப்படும் பட்சத்திலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புகளும், வருமானம் உழைப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in 





